பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மங்கள சமரவீர அறிவிப்பு

by Staff Writer 09-06-2020 | 6:49 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென இன்று பிற்பகல் அறிவித்தார். மாத்தறையில் இன்று பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் மந்திரி அரசியலுக்கு தாம் விடைகொடுக்க தீர்மானித்ததாக அவர் தெரிவித்தார். பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர் என்ற வகையில், வாக்குச்சீட்டில் தமது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தாலும் தமது விருப்பு இலக்கத்திற்கு முன்பாக வாக்களிக்க வேண்டாமென மங்கள சமரவீர கோரியுள்ளார். ஒருவருக்கொருவர் குரோதத்தினால் பிளவுபடாத மனிதர்களாக செயற்பட்டு ஒன்றிணைந்து சரியான அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதற்கு புதிய அரசியல் பிரவேசம் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்காக இன, மத, குல மற்றும் அரசியல் கலாசார வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் உதவுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். லண்டன் புனித மார்ட்டின் கல்லூரியில் ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் பட்டம் பெற்ற மங்கள சமரவீர 1983 ஆம் ஆண்டு மாத்தறை மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதம அமைப்பாளராக செயற்பட்டு அரசியலில் ஈடுபட்டார். 1989 ஆம் ஆண்டு மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அமைச்சரவையில் தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு வரை மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீர 2010 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்தில் வௌிவிவகார அமைச்சராக செயற்பட்ட அவர் பின்னர் நிதியமைச்சராக செயற்பட்டார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர்கள் குழு மற்றும் மாவட்ட தலைவராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.