மாணவர்களை நாட்டிற்கு அழைக்கும் செயற்பாடு நிறைவு

இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடு இறுதிக் கட்டத்தை அடைந்தது

by Staff Writer 09-06-2020 | 9:01 AM
Colombo (News 1st) வௌிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. 80 மாணவர்கள் அடங்களாக 250 பேரை நாளை மறுதினம் (11) பிலிப்பைன்ஸில் இருந்து அழைத்து வருவதாக ஜனாதிபதியின் வௌிநாட்டு தொடர்புகளுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். குறித்த 80 மாணவர்களும் நாடு திரும்பினால், வௌிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடு நிறைவுபெறும் என அவர் கூறியுள்ளார். இதேவேளை, பெலாரஸில் தற்போது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள 250 மாணவர்கள் அடுத்த மாதமளவில் நாடு திரும்பவுள்ளதாகவும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார். இந்த மாணவர்கள் தற்போது பரீட்சைகளில் தோற்றியுள்ளதால் அவர்களை அடுத்த மாதம் அழைத்துவர தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, வௌிநாடுகளுக்கு தொழிலுக்கு சென்றுள்ள பணியாளர்கள் உள்ளிட்ட 25,000 இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் தெரிவித்தார். இவர்களையும் விரைவில் நாட்டிற்கு திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு அழைத்து வரப்படும் அனைவருக்கும் விமான நிலையத்திலேயே PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியின் வௌிநாட்டு தொடர்புகளுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.