இன்று முதல் பொது போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியது

by Staff Writer 08-06-2020 | 2:34 PM
Colombo (News 1st) அனைத்து அலுவலக, தபால் மற்றும் தூர இடங்களுக்கான ரயில் சேவைகள், நேர அட்டவ​ணையின் பிரகாரம் இன்று (08) பயணிப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் நகரங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் தெனுவர மெனிக்கே மற்றும் கல்கிஸ்ஸ முதல் காங்கேசன்துறை வரை பயணிக்கும் ரயில்கள் இன்று சேவையில் ஈடுபடவில்லை என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பயணங்களின் போது, சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்காக 900 பஸ்களை இன்று சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பஸ்களில் ஆசன எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கை போக்குவரத்து சபைக்குட்பட்ட 4,824 பஸ்கள் இன்று ​சேவையில் ஈடுபட்டுள்ளன.