வௌிநாடுகளிலிருந்து வருவோருக்கு PCR சோதனை கட்டாயம்

வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கு PCR பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம் 

by Staff Writer 07-06-2020 | 8:25 AM
Colombo (News 1st) வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் PCR  சோதனையை மேற்கொண்டு நாடு திரும்பினாலும், நாட்டை வந்தடைந்ததும் மீண்டும் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் காணப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் எண்ணிக்கை, கொரோனா சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சமூகத்தில் தொற்று பரவாத வகையில் பராமரிப்பு செயற்பாடுகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களின் அடிப்படையில் வௌிநாடுகளில் உள்ள இலங்கையர் அழைத்துவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் இலங்கையர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதால், தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார். வௌிநாடுகளில் மேற்கொள்ளப்படும் PCR சோதனைகளில் எவ்வித பயன்களும் இல்லை என விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடு திரும்பும் அனைவருக்கும் விமான நிலையத்தில் PCR பரிசோதனையை மேற்கொள்ளுதல் கட்டாயமானது என அவர் கூறியுள்ளார். விமான நிலையங்களில் காலையில் எடுக்கப்படும் மாதிரிகளுக்கான PCR அறிக்கை மாலை வேளைக்குள் விநியோகிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். PCR அறிக்கை கிடைக்கும் வரை அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு, தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.