திங்கள் முதல் பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

திங்கள் முதல் பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்

by Staff Writer 05-06-2020 | 1:44 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (08) தொடக்கம் பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய, அனைத்து ரயில்களும் சேவையில் ஈடுபடவுள்ளன. இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதனிடையே, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அனைத்து பஸ்களையும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தனியார் பஸ்களின் சேவைகளையும் ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடிகள் ஏற்படும் பட்சத்தில், இதுவரை பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படாதிருந்த பஸ்களையும் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட அனுமதிச்சீட்டுகள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார். பஸ்கள் மற்றும் ரயில்களில் காணப்படும் ஆசனங்களின் அளவிற்கு மாத்திரமே பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும். பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட அனைத்து சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.