கழிவுகளால் நிரம்பியுள்ள கல்கிசை கடற்கரை

by Staff Writer 04-06-2020 | 8:51 PM
Colombo (News 1st) அதிகக் கழிவுகளும் குப்பை கூளங்களும் நிறைந்து கல்கிசை கடற்கரை இன்று காட்சியளித்தது. பருவ மாற்றத்தின் போது கடல் அலைகளால் கழிவுகள் கரையொதுங்குவது வழமையாகும். எனினும், இம்முறை வழமைக்கு மாறாக அதிகளவான கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இங்கையிலுள்ள கடற்கரைகளில் கல்கிசை கடற்கரைக்கு தனிச்சிறப்புண்டு. கடற்கரைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அங்கே குப்பைகளைப் போடக்கூடாது என்பதை அறிவுறுத்தும் வகையில் அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கடற்கரையை துப்புரவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என தெஹிவளை-கல்கிசை மேயர் ஸ்டான்லி டயஸிடம் வினவியபோது, விசேட ஊரடங்கு சட்ட காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஊழியர்களை ஈடுபடுத்தி கடற்கரையை விரைவாக துப்புரவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். இதேவேளை, கல்கிசை கடற்கரை பகுதியில் மணல் சேகரிக்கும் திட்டத்தில் உரிய பயனை பெற முடியவில்லை என புதிய அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பட்டியாரச்சி, கடல்வாழ் உயிரியல் விஞ்ஞானி ஆஷா டி வாஸ் மற்றும் நாடியா அஸ்மி ஆகியோர் இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளனர். 'கல்கிசை கடற்கரையில் அனர்த்தம்' என பெயரிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், போதியளவு திட்டமிடலின்றி இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, அடிப்படை கடற்கரை பொறியியல் மூலோபாயங்களையேனும் பொருட்படுத்தாமல் செயற்றிட்டப் பணிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.