வெடிவைத்து யானை கொலை: விசாரணைக்கு உத்தரவு

அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து யானை கொலை: விசாரணை நடத்துமாறு உத்தரவு

by Bella Dalima 04-06-2020 | 4:55 PM
Colombo (News 1st) கேரளாவில் யானை ஒன்றை அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொன்ற வழக்கில், விசாரணை நடத்துமாறு குற்றத்தடுப்புப் பிரிவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சைலன்ட் பள்ளத்தாக்குப் பகுதியில் யானை ஒன்று மூன்று நாட்களாக தும்பிக்கை மற்றும் வாய்ப் பகுதியை ஆற்று நீரில் முக்கியவாறு நின்றுள்ளது. இதனை அவதானித்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து, அங்கு சென்ற அவர்கள் யானையின் தும்பிக்கையின் உள்ளே, தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். வெடிபொருள் மறைத்துவைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை யாரோ யானைக்கு கொடுத்துள்ளதுடன், அதனை உண்ணும் போது வெடிபொருள் வெடித்ததால் யானையின் தாடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. காயங்களால் ஏற்பட்ட வலியை தவிர்ப்பதற்காகவே யானை ஆற்றுநீரில் நின்றுகொண்டு தொடர்ச்சியாக நீரைத் தெளித்துள்ளது. குறித்த யானையை மீட்டு சிகிச்சை அளிப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் முயற்சித்த போதிலும் அது பலனளிக்காமல், யானை இறந்துள்ளது. யானை ஒரு மாத கர்ப்பத்துடன் இருந்துள்ளதும் உடற்கூற்று பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது. யானையின் கொடூரக் கொலைக்கு காரணமானவரைக் கைது செய்து, தகுந்த தண்டனை வழங்குமாறும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் கேரள அரசுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.