குளவி கொட்டியதில் உயிரிழந்தவரின் உடல் கையளிப்பு

லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவரின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு

by Staff Writer 03-06-2020 | 2:14 PM
Colombo (News 1st) தலவாக்கலை - லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பெண்ணின் சடலம் இன்று (03) உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். 4 பிள்ளைகளின் தாயான​ 59 வயதுடைய பெண்​ணொருவரே நேற்று குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார். கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது குளவிக்கொட்டுக்கு இலக்கான குறித்த பெண், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் குளவிகளினால் தமக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தோட்டத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனிடையே, நேற்று குளவிக்கொட்டுக்கு இலக்கான ஏனைய 7 பேரும் தொடர்ந்தும் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் ஐவரும் அடங்குகின்றனர்.