தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடுகின்றது

by Staff Writer 03-06-2020 | 7:34 AM
Colombo (News 1st) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) முற்பகல் கூடவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்தும் பாராளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணையின்றி தள்ளுபடி செய்யப்பட்டமையினால், ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் பொதுத்தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது. தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாதென இதற்கு முன்னர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இதனிடையே, ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு வேறொருவரை பெயரிடுவது தொடர்பிலான கடிதத்தை இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் கட்சியின் செயலாளரிடம் கையளிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துகளும் தெரிவிக்கப்படுகின்றன. தேசிய ஆணைக்குழுவிற்கு தற்போது தேர்தலை நடத்துவதற்காக திகதியைத் தீர்மானிப்பதற்கு அதிகாரம் உள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் பேஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கு எவ்வேளையிலும் தயாராகவே உள்ளதாக அதன் வேட்பாளர் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.