இரத்மலானையில் துப்பாக்கிச்சூடு: மேலும் இருவர் கைது

இரத்மலானை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் இருவர் கைது

by Staff Writer 03-06-2020 | 11:14 AM
Colombo (News 1st) இரத்மலானை - சொய்சாபுர பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் 225 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்குலான பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (03) கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சொய்சாபுர பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் கடந்த 29 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் நேற்று முன்தினம் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அங்குலான மற்றும் இரத்மலானை பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இதேவேளை, மாளிகாவத்தை லக்செத குடியிருப்புத் தொகுதியில் 35 வயதான ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி காயமேற்படுத்தியமை தொடர்பில் நேற்று மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதான சந்தேகநபர் குறித்த குற்றச்செயலுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் மாளிகாகந்தை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார். கடந்த 30 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்பில் இதற்கு முன்னர் மூவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.