சிறைச்சாலையில் இருந்து குற்றச்செயல்களை வழிநடத்துவதைத் தடுக்க வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

by Staff Writer 02-06-2020 | 8:25 PM
Colombo (News 1st) பாதாளக்குழு தலைவர்களும் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் சிறைச்சாலையில் இருந்து குற்றச்செயல்களை வழிநடத்துவதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார். சிறைச்சாலைகள் அதிகாரிகள் சிலருடன் நேற்று (01) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். சிறைச்சாலைகளின் உள்ளக நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்லா, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, நீதி அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.மொஹமட் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர். முப்படையினர், பதில் பொலிஸ் மா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பொலிஸ் மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.