போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பவுள்ளது

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போன்று முன்னெடுக்க தீர்மானம்

by Staff Writer 02-06-2020 | 5:00 PM
Colombo (News 1st) எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் பொதுப் போக்குவரத்து சேவையை வழமை போன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ரயில் மற்றும் பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமை போன்று முன்னெடுத்துச் செல்லும் போது ஏற்படக்கூடிய சிக்கல்கள் மற்றும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய விதம் தொடர்பிலும் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை ​போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் போதுமானதாக இல்லையென்பதால், சுற்றுலா பஸ்கள் மற்றும் பாடசாலை சேவைகளில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் காத்திருப்பு பட்டியலில் உள்ள அனைத்து பஸ்களையும் தற்காலிகமாக பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்