இரத்மலானை துப்பாக்கி பிரயோகம்; மற்றுமொருவர் கைது

இரத்மலானையில் துப்பாக்கிப் பிரயோகம்; மற்றுமொரு சந்தேகநபர் கைது

by Staff Writer 02-06-2020 | 9:33 AM
Colombo (News 1st) இரத்மலானை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அக்குரஸ்ஸ பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அறிவித்துள்ளது. இரத்மலானை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது கடந்த 19 ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டு ஒருவரை காயப்படுத்தியமை மற்றும் அதே வர்த்தக நிலையத்தில் கடந்த 28 ஆம் திகதி துப்பாக்கி பிரயோகம் நடாத்தி தப்பிச் செல்வதற்கு உதவி புரிந்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி தெஹிவளை- கல்கிஸ்ஸை நகர சபையின் உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர், 2017 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான இரத்மலானே ரோஹா என்பவரை கொலை செய்ய முயற்சித்திருந்தவர் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.