குரும்பசிட்டி பகுதி கிணற்றிலிருந்து இன்றும் வெடிபொருட்கள் மீட்பு

by Staff Writer 02-06-2020 | 8:45 PM
Colombo (News 1st) வலி - வடக்கு - குரும்பசிட்டி பகுதியிலுள்ள கிணற்றில் மூன்றாவது நாளாகவும் இன்று வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. கடந்த வாரத்தில் தனியார் காணியிலுள்ள கிணறு துப்புரவு செய்யப்பட்ட போது வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பில் காணி உரிமையாளர் பலாலி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் மூன்றாவது நாளாக இன்று கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலுள்ள கிணற்றிலிருந்தே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, அம்பாறை - ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இத்திக்குளத்திலிருந்து இன்று வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இராணுவப்புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்த தகவலுக்கமைய குண்டு செயலிழக்கச் செய்யும் பிவினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இத்திக்குளத்திற்குள் உரைப்பைகளுக்குள் இட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. குண்டு செயலிழக்கும் பிரிவினரால் மூன்று உரைப்பைகள் வெடிபொருட்களுடன் மீட்கப்பட்டுள்ளன.