வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாவிற்காக கடல் தீர்த்தம் எடுக்கப்பட்டது

by Staff Writer 01-06-2020 | 9:57 PM
Colombo (News 1st) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசி பொங்கல் விழாவுக்காக கடல் தீர்த்தம் எடுக்கும் பாரம்பரிய வைபவம் இன்று (01) நடைபெற்றது. முல்லைத்தீவு காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து பக்தர்கள் கடற்கரைக்கான பாதயாத்திரை இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பித்தனர். பரை மேள வாத்தியங்கள் முழங்க பண்பாட்டு ரீதியான யாத்திரைப் பயணம் ஆரம்பமானது. கடல் தீர்த்தம் எடுக்கும் நிகழ்வில் வழமையாக அதிகளவிலானவர்கள் பங்கேற்றாலும் கொரோனா அச்சம் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட சிலருக்கு மாத்திரமே இம்முறை சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தது. காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து கடலுக்கு செல்லும் வீதியில் படையினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது. 10 கிலோமீற்றர் தூர பயணத்தின் பின்னர் கடற்கரை அடைந்த பக்தர்கள் கடலில் இறங்கி தீர்த்தம் எடுத்து வந்தனர் இந்தத் தீர்த்தம் காட்டா விநாயகர் ஆலயத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விளக்கேற்றப்படவுள்ளது. ஒரு வாரம் கடல்நீர் தீர்த்தத்தில் விளக்கேற்றப்பட்டு அடுத்த வாரம் திங்கட்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் விழா நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது​.