by Staff Writer 01-06-2020 | 2:57 PM
Colombo (News 1st) போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக மேல் மாகாணத்தை மையமாக கொண்டு விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் 24 மணித்தியாலங்களும் விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்திற்குள் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில், போதைப்பொருட்களுடன் 708 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதிக்குள் 697 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து ஹெரொயின், மாவா, ஐஸ் மற்றும் போதை வில்லைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் தற்காலிமாக தங்கியுள்ளவர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட 90 கிராம சேவையாளர் பிரிவுகளில் அமைந்துள்ள வீடுகளில், தற்காலிகமாக தங்கியுள்ள நபர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் 40,871 பேரின் தரவுகள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன.