மொஸ்கோவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தம்

கொரோனா; மொஸ்கோவில் 9 வாரங்களின் பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தம்

by Chandrasekaram Chandravadani 01-06-2020 | 4:31 PM
Colombo (News 1st) ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் முடக்கல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும், அதிகாரிகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளனர். பூங்காக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன மீளத் திறக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நடைபயிற்சியில் ஈடுபடுவதற்கும் மட்டுப்படுத்தப்பட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 9 வாரங்கள் அங்கு முழுமையான முடக்கல் அமுலிலிருந்த நிலையில், முதல்தடவையாக மக்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனா தொற்றின் உச்சநிலை கடந்துவிட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இருப்பினும் அங்கு தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இன்றைய தினம் மேலும் 9,035 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 162 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதனையடுத்து ரஷ்யாவில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 414,878 ஆகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,855 ஆகவும் அதிகரித்துள்ளன. உலகளாவிய ரீதியில் அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா, பிரேஸிலுக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் ரஷ்யா நிரற்படுத்தப்பட்டுள்ளது.