மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

by Staff Writer 30-05-2020 | 3:36 PM
Colombo (News 1st) வெலிகம - மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 7.30 அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் ''சன்ஷைன் சுத்தா'' என அழைக்கப்படும் ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதுடன், தப்பிக்கும் நோக்கில் அவர்கள் அருகில் இருந்த வீடுகளுக்குள் நுழைந்த விதம் CCTV கெமராக்களில் பதிவாகியுள்ளது. காயமடைந்தவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்களில் வருகை தந்து துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் முச்சக்கரவண்டியொன்றில் மிரிஸ்ஸ முச்சந்தி நோக்கி சென்றுள்ளார். இதனையடுத்து, அவர் பயணித்த முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்ல முயன்ற நிலையில், பிரதேசமக்கள் அவரை பிடித்து தாக்கியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபர் வெலிகம பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் அவர் மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். பாதாள உலககக்குழுவின் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் விளைவாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.