இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

by Bella Dalima 29-05-2020 | 8:30 PM
Colombo (News 1st) இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார். மே 14 ஆம் திகதி காணொளி தொழில்நுட்பத்தினூடாக நியமனப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்த இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று ஜனாதிபதியை சந்தித்தார். கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஜனாதிபதியின் தலைமைத்துவம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த வாழ்த்துக்களை இந்த சந்திப்பின் போது புதிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். இலங்கை மாணவர்களுக்கு மேலதிக புலமைப்பரிசில்களை வழங்குவது மற்றும் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புகள் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.