5000 ரூபா கொடுப்பனவை நிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கூறியதா?

by Staff Writer 28-05-2020 | 8:49 PM
Colombo (News 1st) 5000 ரூபா கிடைக்கவில்லை என தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தேர்தல்கள் ஆணையாளரின் கடிதத்தின் அடிப்படையில் அநாவசியமான பிரச்சினை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே 5000 ரூபா கொடுப்பனவை வழங்காதுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார். பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படாததால், தேர்தல்கள் ஆணையாளரின் சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு செயலாற்ற வேண்டியுள்ளதாக அவர் கூறினார். அமைச்சர் அவ்வாறு கூறினாலும், தேர்தல்கள் ஆணைக்குழு அதனை நிறுத்துமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.
இந்த நடவடிக்கை அரசியல்மயமாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என்றே ஆணைக்குழு தெரிவித்தது. நாடு வழமைக்கு திரும்பியிருந்தால் அத்தகைய முறைப்பாடுகள் கிடைக்கும் வகையில் செயற்பட வேண்டிய தேவை என்ன? ஆகவே, ஜூன் மாதத்திலும் அதனை வழங்க வேண்டுமா என மீள் பரிசீலனை செய்யுமாறு கூறப்பட்டது. அவ்வாறு வழங்குவதாக இருந்தால் முற்றிலும் அரசியல் செயற்பாட்டினை நிறுத்துமாறு கோரப்பட்டது
என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.