மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பாராளுமன்றத்தில் இறுதி அஞ்சலி

by Staff Writer 28-05-2020 | 9:32 PM
Colombo (News 1st) மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் கொழும்பு சௌமியபவனில் இருந்து ரம்பொடை வேவெண்டன் இல்லத்திற்கு நாளை (29) காலை மக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படவுள்ளது. பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்ட அன்னாரது பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் ராஜகிரியவிலுள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் பூதவுடல் தாங்கிய பேழையை பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு எடுத்துச்சென்றனர். இதனையடுத்து, பாராளுமன்ற கட்டடத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அன்னாரின் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தனது பாரியாருடன் இணைந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் அன்னாரின் பூதவுடல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.