by Staff Writer 28-05-2020 | 7:08 PM
Colombo (News 1st) ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (29) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான 8 ஆம் நாளுக்குரிய பரிசீலனை, பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
இடைமனுதாரர்கள் இன்று தமது தரப்பு அடிப்படை விடயங்களை சமர்ப்பித்தனர்.
பொதுத்தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் 16 இடைமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இடைமனுதாரர்களின் சமர்ப்பணங்கள் நிறைவு பெற்றதன் பின்னர், பொதுத்தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதா, இல்லையா என உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும்.
பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதியால் கடந்த மார்ச் 02 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை இடைநிறுத்துமாறும் கோரி இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.