குவைத்திலிருந்து நாடு திரும்பிய 313பேருக்கு தொற்று

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 465 பேரில் 313 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 28-05-2020 | 6:50 PM
Colombo (News 1st) இலங்கையில் ஒரே நாளில் அதிகளவிலான COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் (27) பதிவானது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களில் 97 பேர் வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். பெரும்பாலானவர்கள் குவைத்திலிருந்து வந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆம் திகதி குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 465 பேரில் 313 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று மாலை உறுதி செய்யப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு தொற்று அதிகம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதன் காரணமாக சமூகத்தில் COVID-19 தொற்று பரவுவதற்கான சந்தர்ப்பம் தடைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்நோய் சமூகத்தில் பரவும் அபாயம் 100 வீதம் தணியவில்லை என சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார். இதேவேளை, இன்று இதுவரையான காலப்பகுதியில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 15 பேர் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஏனைய இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களாவர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1486 ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் 731 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 745 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, கொழும்பு - கோட்டை கபூர் கட்டடத்தில் இருந்த கடற்படை உறுப்பினர்கள் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கடற்படையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.