ஆறுமுகன் தொண்டமான் மறைவு: பலர் இரங்கல்

ஆறுமுகன் தொண்டமான் மறைவு: நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இரங்கல்

by Staff Writer 28-05-2020 | 6:40 PM
Colombo (News 1st) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவையொட்டி, தொடர்ந்தும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலங்கைவாழ் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு கவலையளிப்பதாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருரும் குடும்பத்தாருக்கு அனுதாபத்தை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அமைச்சர் தொண்டமான் என்ற வரலாற்றுப் பெயரும், இ.தொ.கா எனும் பேரியக்கமும் இலங்கை அரசியல் வரலாற்றில் தடம் பதித்துள்ளதாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்துள்ளார். மறைந்த அமைச்சர் கட்சியின் தலைமையினது இலட்சியங்களை முறையாக முன்னெடுத்து, நாட்டின் நிலைமைக்கு ஏற்ப தனது சமூகத்திற்கு தேவையானவற்றை முறையாகவும் படிப்படியாகவும் சாதித்த தலைவர் எனவும் அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். மலையக மக்களுக்கும் தமிழினத்திற்கும் தன்னிகரில்லா சேவைகளைச் செய்து தைரியமாக குரல் கொடுத்த தலைவரின் மறைவு நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு என மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தெரிவித்துள்ளது.