'ஹொங்கொங் விடயத்தில் வேறு நாடுகள் தலையிட முடியாது'

ஹொங்கொங் விடயத்தில் வேறு நாடுகள் தலையிட முடியாது - கெரி லாம்

by Staff Writer 27-05-2020 | 12:17 PM
Colombo (News 1st) ஹொங்கொங்கின் விடயங்களில் மற்றைய நாடுகள் தலையிட முடியாதென, அந்தப் பிராந்தியத்தின் நிர்வாகத் தலைவர் கெரி லாம் (Carrie Lam) தெரிவித்துள்ளார். சீனாவால் திட்டமிடப்பட்ட சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை அவர் வலுவாக ஆதரித்து வருகின்ற நிலையில், இந்தக் கருத்தினை வௌியிட்டுள்ளார். குறித்த பாதுகாப்புச் சட்டம் ஹொங்கொங் மக்களினுடைய உரிமைகளைக் குறைக்காது எனவும் அவர் கூறியுள்ளார். ஆகவே இது சட்டத்தை மதிக்கும் பெரும்பான்மையானவர்களைப் பாதுகாப்பதற்கான நகர்வு எனவும் அவர் கூறியுள்ளார். சீனாவினால் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பான அறிவிப்பு வௌியிடப்பட்டதன் பின்னர், ஹொங்கொங் நிர்வாகத்தலைவர் Carrie Lam அது தொடர்பில் கருத்து வௌியிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பிரிவினை, சதி செய்தல், தேசத்துரோகம், நாட்டைத் துண்டாடல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு இந்தப் புதிய பாதுகாப்புச் சட்டம் தடை விதிக்கின்றது. இந்தச் சட்டம் ஹொங்கொங்கின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, ஹொங்கொங் மக்களுக்கும் புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தாய்வான் ஜனாதிபதி தமது ஆதரவினைத் தெரிவித்திருந்தார். அத்துடன் சீனாவின் செயற்பாட்டிற்கு தமது கண்டனத்தினையும் அவர் வௌியிட்டார்.