யாழில் வெடிப்புச் சம்பவமொன்று பதிவானது

by Staff Writer 27-05-2020 | 1:17 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வள்ளிபுர ஆழ்வார் முச்சந்தி பகுதியில் நிலத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருளொன்று வெடித்துள்ளது. குறித்த வெடிப்பு சம்பவத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (27) காலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லையென நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்தனர். அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸ் தடயவியல் பிரிவு மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.