பொறியில் சிக்கிய கருஞ்சிறுத்தை: காணி உரிமையாளர் கைது

by Staff Writer 27-05-2020 | 8:53 PM
Colombo (News 1st) ஹட்டன் - நல்லதண்ணி பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று பொறியில் சிக்குவதற்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் பொறி வைக்கப்பட்டிருந்த காணியின் உரிமையாளராவார். நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தின் வாழைமலை பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில் வைக்கப்பட்டிருந்த பொறியில் கருஞ்சிறுத்தை ஒன்று நேற்று (26) சிக்கியது. இந்த கருஞ்சிறுத்தை தற்போதைக்கு இந்நாட்டில் வாழும் மிகவும் அரிய வகை இனமாகும். வனவிலங்குகள் அதிகாரிகள் கருஞ்சிறுத்தையை மயக்கமடையச் செய்து மீட்ட சந்தர்ப்பத்தில் அது காயமடைந்திருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அதன் உடல்நிலை தேறியது. வனவிலங்குகள் திணைக்களத்திற்கு சொந்தமான உடவலயில் அமைந்துள்ள கால்நடை வைத்தியசாலைக்கு கருஞ்சிறுத்தை கொண்டு செல்லப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். உலகில் வாழும் 8 சிறுத்தை இனங்களில் இலங்கை சிறுத்தை என அழைக்கப்படும் இந்த இனம் மிகவும் அரிதானதாகும்.