அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

by Staff Writer 27-05-2020 | 1:29 PM
Colombo (News 1st) மறைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் இராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (27) முற்பகல் 11 மணி மரை அன்னாரின் பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அன்னாரின் பூதவுடல் நாளைய தினம் (28) பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கட்சித் தலைமையகமான சௌமியபவனுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. பின்னர் அங்கிருந்து இறம்பொடையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு மீண்டும் பூதவுடல் கொட்டகலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. அன்னாரின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் தொண்டமான் விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளதாக ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் நேற்று (26) காலமானார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஜனாதிபதி இதனை பதிவிட்டுள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்பதுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக உறுதியாக நின்றவர் என தனது டுவிட்டர் வலைத்தளத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரங்கல் வெளியிட்டுள்ளார். சில மணித்தியாலங்களிற்கு முன்னர் தாம் ஒன்றாக அமர்ந்திருந்து நினைவுகளை மீட்டியதுடன் ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு தன்னை வேதனைக்குள்ளாக்கியுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டரில் இரங்கல் வௌியிட்டுள்ளார். வேதனையில் வாடும் அன்னாரின் குடும்பத்திற்கு தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தனது நண்பனை தான் இழந்துள்ளதாகவும் பிரதமரின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஒரு தலைவராக தனது மக்களுக்கு நியாயமாக பணியாற்றியவர் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரங்கல் வௌியிட்டுள்ளார். அன்னாரினது இழப்பு நாட்டின் சமூகங்களில் தாக்கத்தை செலுத்தும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அன்னாரது மறைவானது மலையக மக்களிற்கு மாத்திரமல்லாது முழு இலங்கை வாழ் மக்களிற்கும் ஒரு பாரிய இழப்பாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையக மக்களுக்கு மாத்திரமின்றி ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் பேரிழப்பாகும் என தமிழர் விடுதலை கூட்டணி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆறுமுகன் தொண்டமனை சந்தித்திருந்த நிலையில் அவரது திடீர் மறைவை நம்ப முடியவில்லை என இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் துன்பகரமான திடீர் மறைவினால் அதிர்ச்சி அடைவதாகவும் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இரங்கல் வௌியிட்டுள்ளார். மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஶ்ரீ ஐயப்பதாச குருக்கள் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு அப்பால்பட்ட நண்பரும் கட்சித் தலைவர் சகாவுமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவு வேதனையளிப்பதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் இரங்கல் வௌியிட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகன் தொண்டமானின் மறைவு மலையகத்திற்கு பேரிழப்பு என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு மலையக சமூகத்துக்கு பெரும் பேரிடி என மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அமைச்சரின் மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையும் துக்கமும் அடைவதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். அவரது மறைவு நிச்சயமாக நிரப்பப்பட முடியாத வெற்றிடமாகவே அமையும் என மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு என முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் இரங்கல் வௌியிட்டுள்ளார்.