கலைஞர்களுக்கு கொடுப்பனவு வழங்குமாறு கோரிக்கை

வட மாகாண கலைஞர்களுக்கு வாழ்வாதார கொடுப்பனவுகளை வழங்குமாறு சுரேந்திரன் குருசுவாமி கோரிக்கை

by Staff Writer 26-05-2020 | 7:37 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றினால் முடங்கியுள்ள வட மாகாணத்தில் வாழும் கலைஞர்களுக்கான வாழ்வாதார கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வட மாகாண ஆளுநருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு கலைஞர்கள் அவதியுறும் நிலை காணப்படுவதாக வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸூக்கு அனுப்பியுள்ள கடித்ததில் சுரேந்திரன் குருசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார். நாதஸ்வரம், தவில் வித்துவான், நடனக்கலைஞர்கள் போன்றவர்கள் திருவிழா, பண்டிகைக் காலங்களில் வருமானம் ஈட்டி வந்த நிலையில், கொரோனா தொற்றினால் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கலைஞர்கள் வருமானம் ஈட்டும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளதுடன், அவர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையை கருதிற்கொண்டு நிலைமை சுமூகமடையும் வரை வாழ்வாதார கொடுப்பனவுகள் வழங்க உரிய பிரதேச சபைகள் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி, வட மாகாண ஆளுநரை கோரியுள்ளார்.