முகமாலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுப்பு

by Staff Writer 26-05-2020 | 7:59 PM
Colombo (News 1st) கிளிநொச்சி - முகமாலையில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இன்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று பகல் 01.30 அளவில் கிளிநொச்சி நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மனித எச்சங்கள், சீருடை, துப்பாக்கிகள், வெடிபொருட்கள் என்பன குறித்த இடத்தில் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். மீட்கப்பட்ட தடயப் பொருட்களில் வெடிபொருட்கள் தவிர்ந்த ஏனையவற்றை நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். வெடிபொருட்களை செயலிழக்கச் செய்து, பொலிஸ் பாதுகாப்பில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த பகுதியில் எதிர்வரும் ஜூன் மாதம் 02 ஆம் திகதி மீண்டும் அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். முகமாலையில் கடந்த 22 ஆம் திகதி கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். இதன்போது, குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு அமைய, இன்று அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.