பொதுத்தேர்தல்:மேலதிக பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு

பொதுத்தேர்தலை ஆட்சேபிக்கும் மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை வரை ஒத்திவைப்பு

by Staff Writer 26-05-2020 | 6:39 PM
​Colombo (News 1st) ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (27) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்ட பரிசீலனைகளின் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில், இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் இந்திகா தேவமுனி டி சில்வா இன்றும் தமது தரப்பு அடிப்படை விடயங்களை சமர்ப்பித்திருந்தார். பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் முன்னெடுக்கப்படும் விடயங்கள் தொடர்பிலும் அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயதானங்களையும் அவர் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எடுத்துரைத்துள்ளார். ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் இடைமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.