பசில் ராஜபக்ஸவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Staff Writer 26-05-2020 | 3:31 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன வழக்கை ஒத்திவைத்து இன்று உத்தரவிட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2991 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி பயனாளர்களுக்கு கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணிகள் சிலர் இன்று உயர் நீதிமன்ற வழக்கில் ஆஜராகியுள்ளமையால், இன்றைய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகளின் கீழ், பசில் ராஜபக்ஸ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க மற்றும் அதன் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.