ஹொங்கொங்கில் புதிய பாதுகாப்பு சட்டம் அவசியம்

ஹொங்கொங்கில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த புதிய பாதுகாப்பு சட்டம் அவசியம்

by Staff Writer 25-05-2020 | 4:18 PM
Colombo (News 1st) ஹொங்கொங்கில் அதிகரித்துவரும் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டம் அவசியமென அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புத்துறைத் தலைவர் ஜோன் லீ தெரிவித்துள்ளார். ஹொங்கொங் தற்போது வன்முறைகளால் சூழப்பட்ட பிராந்தியமாக மாற்றமடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக ஹொங்கொங்கில் அமைதி நிலவிவந்த நிலையில், நேற்றும் நேற்று முன்தினமும் அங்கு புதிய ​போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. சீனாவினால் ஹொங்கொங்கில் அமுல்படுத்தவென முன்மொழியப்பட்ட பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தச் சட்டங்கள் ஹொங்கொங்கின் தனித்துவத்தை முற்றாக அழித்து விடக்கூடிவையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பாதுகாப்புச் சட்டங்கள் மூலம் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் விமர்சகர்களை அடக்குவதற்கும் முயற்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.