நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

by Staff Writer 25-05-2020 | 2:22 PM
Colombo (News 1st) நாளை (26) முதல் பலத்த மழையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன், நிலவும் மழையுடனான வானிலையால் இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, குருவிட்ட, கலவான, இரத்தினபுரி, ஓப்பநாயக்க, பெல்மடுல்ல, பலாங்கொட, நிவித்திகல ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. கேகாலை மாவட்டத்தின் புளத்கொஹூப்பிட்டிய, தெரணியகல, தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர, நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர குறிப்பிட்டார். அதேநேரம், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எலபாத, கிரிஎல்ல, கொடக்கவெல்ல, கஹவத்த, கொலன்ன ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை மற்றும் மாவனெல்ல பகுதிகளுக்கும் முதல்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தின் கங்க இஹல கோரளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கும் முதல்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதனைத்தவிர கண்டி, கேகாலை, இரத்தினபுரி மற்றும் நுவெரலியா மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை பெய்து ிவருவதால் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்