நாடளாவிய ரீதியில் நாளை முதல் ஊரடங்கு சட்டம் தளர்வு

by Staff Writer 25-05-2020 | 7:07 PM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் நாளை (26) முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இந் நடைமுறை மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பங்களிலும் பயணிகள் போக்குவரத்தின் போதும் சுகாதார அதிகாரிகளினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவௌியை பேணுதல் என்பனவும் இதில் அடங்குகின்றன. அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவையில் ஈடுபடும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் சேவைக்கு அழைப்பவர்கள் தொடர்பிலும் நிறுவனத்தின் சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு உள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாளாந்த பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. நாளை (26) முதல் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சமூக இடைவௌியை பேணாத மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன், உடல் கட்டழகு நிலையங்கள், ஸ்பா மற்றும் திரையரங்குகளை மீளத்திறக்க அனுமதியில்லை எனவும் சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் கூறியுள்ளார்.