உணவுப் பொதியின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

உணவுப் பொதியின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

by Staff Writer 25-05-2020 | 2:41 PM
Colombo (News 1st) அத்தியாவசிய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் உணவுப்பொதி ஒன்றின் விலையையும் அதிகரிக்க நேரிடும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. சீனி, பருப்பு, கிழங்கு, உலர்ந்த மிளகாய், டின்மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி கடந்த வௌ்ளிக்கிழமை அதிகரிக்கப்பட்டது. அத்துடன் திராட்சை, அப்பிள், தோடம்பழம், பேரிச்சம்பழம், மரமுந்திரிகை, சோளம், மாஜரின், வாசனைத் திரவியங்கள் மற்றும் எண்ணெய் வகைகள் உள்ளிட்ட பல பொருட்களின் விசேட வர்த்தக வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட வர்த்தக வரிக்கு அமைய உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். சிற்றுண்டிசாலைகளை நாளை திறந்தாலும் நேற்று முன்தினம் அதிகரிக்கப்பட்ட வர்த்தக வரிக்கு அமைய உணவு வகைகளின் விலையை உயர்த்தவேண்டிய தேவையுள்ளது. இதற்கமைய முக்கியமாக உணவுப்பொதி ஒன்றின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளது. அத்துடன் மரக்கறி ரொட்டி, ரோல்ஸ், பெட்டிஸ், கொத்து, பராட்டா, முட்டை ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட ஹோட்டலில் தயாரிக்கப்படும் அனைத்து உணவு பொருட்களினதும் விலைகளை உயர்த்துவதற்கு நேரிட்டுள்ளது. இவை அனைத்துக்கும் தேங்காய் எண்ணை பயன்படுத்தப்படுவதால் இந்த நிலையை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம் என அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, கொழும்பில் சுற்றுலா சபையின் அனுமதிபெற்ற மற்றும் அனுமதிப்பத்திரங்கள் உள்ள உணவு விடுதிகள் நாளை (26) முதல் இயங்கவுள்ளன. சுகாதாரத் தரப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த உணவகங்களை திறக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி கூறினார். திறக்கப்படவுள்ள உணவகங்களை அதிகாரிகள் மேற்பார்வை செய்வார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.