10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு பரவுவதற்கான சாத்தியம்

by Staff Writer 24-05-2020 | 3:04 PM
Colombo (News 1st) மழையுடனான வானிலையால் நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான சாத்தியமுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கலாம் என குறித்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 19,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதிக்குள் சுமார் 12,000 இற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் டொக்டர் அருண ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார். மழையுடனான வானிலை நிலவுவதால், டெங்கு காய்ச்சல் மேலும் அதிகரிக்க கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நீர் தேங்காத வகையில் தமது சூழலை வைத்திருக்குமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.