பள்ளிவாசல்களில் தக்பீர் முழங்க வேண்டும்

பெருநாள் தினத்திலாவது பள்ளிவாசல்களில் தக்பீர் முழங்க வேண்டும்: அசாத் சாலி அறிக்கை

by Staff Writer 23-05-2020 | 6:47 PM
Colombo (News 1st) பெருநாள் தினத்தில் மட்டுமாவது பள்ளிவாசல்களில் "தக்பீர்" முழங்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். பெருநாள் தினத்தின் சிறப்பு, தனித்துவத்தை வெளிப்படுத்த பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் தக்பீர் சொல்வதற்கான ஏற்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மேற்கொள்ள வேண்டும் என அசாத் சாலி கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கான அனுமதியை முஸ்லிம் சமய கலாசார திணைக்களம் வழங்க வேண்டுமெனவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், பெருநாள் தினத்தில் துஆ பிரார்த்தனைகளும் இடம்பெற வேண்டுமெனவும் இதன்மூலம் இந்த தக்பீர் சத்தத்தை செவிமடுத்தவாறு, வீடுகளில் தொழுவதற்கான வழி ஏற்படுமெனவும் ஊடக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பள்ளிவாசல் நிர்வாகிகள், முஅத்தின்கள், கதீப்மார்கள் இடைவெளி பேணி, பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகையில் ஈடுபடவும் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்திடம் அனுமதி பெறல் அவசியமாகும் எனவும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் பெருநாள் தொழுகைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்தப்பட இடமளிக்கப்பட்டுள்ளதை முன்னுதாரணமாகக் கொண்டே இக்கோரிக்கையை விடுப்பதாகவும் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்