ஜனாதிபதி, பாரத பிரதமர் இடையில் தொலைபேசி உரையாடல்

இலங்கை அரசாங்கம் கொரோனா தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளது: மோடி புகழாரம்

by Staff Writer 23-05-2020 | 7:43 PM
Colombo (News 1st) COVID-19 அபாயத்தின் மத்தியில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான இணக்கப்பாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் எட்டப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களுக்குமிடையில் இன்று மாலை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளை அனைத்து விதத்திலும் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இருந்து இந்திய பிரதமருடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பரஸ்பர நட்புறவு ரீதியிலான முக்கியத்துவம் மிக்க கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியமை தொடர்பில் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளார். தற்போதைய சிக்கலான சூழ்நிலையில் இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவினால் வழங்கப்பட்ட 10 தொன் மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். "தௌிவான சிந்தனையுடன், விரைவாக கடினமான தீர்மானங்களை எடுக்கும் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை தாம் அடையாளங்கண்டுள்ளதாக நரேந்திர மோடி இதன்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தான் அறிந்த வகையில், இலங்கை அரசாங்கம் கொரோனா தொற்றை சிறந்த முறையில் கட்டுப்படுத்தியுள்ளதுடன், அந்த பெருமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவையே சாரும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.