by Bella Dalima 23-05-2020 | 4:40 PM
ஜோர்தானில் இருந்து கேரளா திரும்பிய நடிகர் பிருத்விராஜ் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
பிருத்விராஜ், ‘ஆடுஜீவிதம்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பிற்காக 58 பேருடன் ஜோர்தான் சென்றிருந்தார்.
அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவன பகுதியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
விமான போக்குவரத்து இல்லாததால், அவர்களால் இந்தியா திரும்ப முடியவில்லை.
பாலைவன பகுதியில் தங்கி இருப்பதாகவும், நல்ல உணவு கிடைக்கவில்லை என்றும் பிருத்விராஜ் உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார். அவரை மீட்டு வரும்படி கேரள அரசுக்கு மலையாள திரையுலகினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அரசு முடியாது என்று கைவிரித்து விட்டது.
இந்த நிலையில், ஜோர்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியது. இந்த விமானத்தில் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் 58 பேரும் டெல்லி திரும்பி, அங்கிருந்து கொச்சியை அடைந்தார்கள்.
பிரித்விராஜ் உள்ளிட்ட 58 பேரையும் கேரள சுகாதாரத்துறை 14 நாட்கள் தனிமைப்படுத்தியுள்ளது.