The Finance நிதி நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து: முதலீட்டு காப்புறுதி ஊடாக வைப்பாளர்களுக்கு இழப்பீடு

by Staff Writer 22-05-2020 | 9:19 PM
Colombo (News 1st) The Finance நிறுவனத்தின் நிதி கொடுக்கல் வாங்கல்களுக்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்ய மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது. நிதித்தொழில் சட்டத்திற்கு அமைய, The Finance நிறுவனத்திற்கு இன்று முதல் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது என இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி குத்தகைக்கு விடல் நிறுவனமாக The Finance நிறுவனம் மேற்கொண்டிருந்த பதிவும் இலங்கை மத்திய வங்கியினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. முதலீட்டு காப்புறுதி ஊடாக வைப்பாளர்களுக்கான இழப்பீட்டை செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என The Finance நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் 93 வீதமான வைப்பாளர்களுக்கு தங்களின் மொத்த நிதியையும் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஏனைய 7 வீதமான வைப்பாளர்கள், தங்களின் நிதியில் பகுதி அளவாக 6 இலட்சம் ரூபா வரை பெற்றுக்கொள்ள முடியும். மிஞ்சிய தொகையை, நிறுவனத்தின் முடிவுறுத்தலின் போது, முன்னுரிமையின் அடிப்படையில் வைப்பாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இழப்பீடு வழங்குவது தொடர்பான மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.