மாளிகாவத்தை சம்பவம்: கைதான அறுவருக்கு விளக்கமறியல்

மாளிகாவத்தை சம்பவம் தொடர்பில் கைதான அறுவருக்கு 4 ஆம் திகதி வரை விளக்கமறியல்

by Staff Writer 22-05-2020 | 2:58 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறும் வகையில் மாளிகாவத்தையில் ஒன்று கூடி, பணம் வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 06 பேரும் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்றிரவு மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - மாளிகாவத்தையில் வீடொன்றுக்கு அருகில் நேற்று (21) பணம் வழங்கப்பட்ட போது, ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்ததுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். இவர்களில் 07 பெண்களும், 02 ஆண்களும் அடங்குவதாக தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் பணிப்பாளர் டொக்டர் லயனல் முஹந்திரம் குறிப்பிட்டார். தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.