பொதுத்தேர்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை

by Staff Writer 21-05-2020 | 8:38 PM
Colombo (News 1st) ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனை நாளை (22) காலை 10 மணிக்கு மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த மனுக்கள் மீதான 4 ஆம் நாள் பரிசீலனை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று இடம்பெற்றது. மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஜனாதிபதி செயலாளர் கலாநிதி. P. B. ஜயசுந்தரவின் சார்பில் ஆஜராகிய, ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா இன்று சமர்ப்பணங்களை முன்வைத்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் ஒருமைப்பாடு இல்லாமையே, தேர்தல் உரிய முறையில் நடத்த முடியாமல் போனமைக்கு காரணம் என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இன்று மன்றில் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தும் தேவை முதலில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருக்க வேண்டும் எனவும், தற்போது அதனைக் காண முடியவில்லையெனவும், அதனாலேயே ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் விடயங்களை முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். பொதுத்தேர்தலை நடத்துவதற்கான உத்தரவை ஜனாதிபதி வழங்கியுள்ள போதிலும் தேர்தல் ஆணைக்குழுவின் இயலாமை காரணமாகவே தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ளதாக அவர் தௌிவுபடுத்தினார். எனவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் இயலாமைக்கு ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டுமா என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதியரசர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார். எனவே, ஜனாதிபதியின் உத்தரவை செல்லுபடியற்றதாக்க வேண்டிய அவசியம் இல்லையெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் நிதி அதிகாரம் எவ்வாறு ஜனாதிபதிக்கு வழங்கப்படுகிறது என்ற விடயம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் இன்று கவனம் செலுத்தப்பட்டது. இந்த காலத்தில் பொதுச்சேவைக்காக பயணத்தை ஒதுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பொதுச்சேவை என்றால் என்ன என்பது தொடர்பிலான பொருள் கோடலை வழங்குமாறு இதற்கு முன்னர் மனுதாரர்கள் கோரியிருந்தனர். பாராளுமன்ற ஆவணத்தை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி, பொதுச்சேவைக்கு பணம் ஒதுக்குவது என்பது சம்பளம் வழங்குவது மாத்திரம் அல்ல, அபிவிருத்தி விடயங்கள் மற்றும் கடன் பெறுவதும் இதில் அடங்குவதாக சுட்டிக்காட்டினார். இதேவேளை, பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாகவும் எதிர்க்கட்சிகள் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மன்றில் விடயங்களை தௌிவுபடுத்தினார். மனுக்கள் மீதான பரிசீலனை நாளை காலை 10 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.