தியகம உத்தேச சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகள் நிறுத்தம்

by Staff Writer 21-05-2020 | 8:21 PM
Colombo (News 1st) தியகம உத்தேச கிரிக்கெட் மைதான நிர்மாணத்தை இடைநிறுத்தி, அந்த நிதியை பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்திக்கு பயன்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட வீரர்கள் சிலருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது. பிரதமருடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னாள் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்களான ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, லசித் மாலிங்க, சனத் ஜயசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர். சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டுடன் தொடர்புடையவர்களின் யோசனைகளை கருத்திற்கொண்டு தியகம மைதானத்தை நிர்மாணிப்பதற்கு பதிலாக பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை விருத்தி செய்யவும், தற்போதைக்கு அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய மைதானங்களின் வசதிகளை மேம்படுத்தி அவற்றின் தரத்தை உயர்த்தவும் பிரதமர் இதன்போது தீர்மானித்துள்ளார். 40 மில்லியன் டொலர் கடனைப் பெற்று 3 அல்லது 4 வீத வட்டியுடன் அதன் தவணைக் கொடுப்பனவாக 3.5 பில்லியன் ரூபா வீதம் 15 வருடங்களுக்கு செலுத்துவதற்கு பதிலாக, அந்த நிதியில் கிரிக்கெட்டின் அடுத்தகட்ட அபிவிருத்தியை திட்டமிடுவது சிறந்தது என குமார் சங்கக்கார இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது போன்ற தருணத்தில் இந்தளவு தொகையை செலவழித்து சர்வதேச மைதானத்தை நிர்மாணிப்பது பொருத்தமானதல்ல.