சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி

by Bella Dalima 21-05-2020 | 3:27 PM
சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, கடந்த வாரம் Post-production பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல், சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.