வடக்கில் அதிக விலையில் உர விற்பனை

வடக்கில் அதிக விலையில் உர விற்பனை

by Staff Writer 20-05-2020 | 6:08 PM
Colombo (News 1st) வட மாகாணத்தின் சில இடங்களில் அதிக விலையில் உரம் விற்பனை செய்யப்படுகின்றமையால், விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் முத்தையன்கட்டு குளத்தின் கீழ் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கையும் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நிலக்கடலை செய்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்த போதிலும் இங்கு விவசாய நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் மானிய உரம் பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், அரசாங்கத்தால் வழங்கப்படும் மானிய உரத்தை சில அதிகாரிகள் தனியார் கடைகளுக்கு அதிக விலையில் விற்பனை ​செய்வதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். இதேவேளை, யாழ். வலிகாமம் வடக்கில் மேட்டு நில பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய உரம் கிடைக்கப்பெறுவதில்லை என கவலை வௌியிட்டனர். மரக்கரி, பழங்கள், தானியங்கள் என பல வித பயிர்செய்கையில் ஈடுபடும் இவர்கள் தனியாரிடமிருந்தே உரத்தை அதிக விலைக்கு பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர். தனியார் வியாபாரிகள் 2500 ரூபா முதல் 3000 ரூபா வரை உரங்களுக்கு தமது விருப்பப்படி அறவிடுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் மானிய உரம் பற்றாக்குறையாக உள்ளதாகவும் சில விவசாயிகள் தெரிவித்தனர்.