பொதுத் தேர்தல் தொடர்பான மனு விசாரணை இன்றும்

பொதுத் தேர்தல் தொடர்பான மனு விசாரணை இன்றும்

by Staff Writer 19-05-2020 | 7:23 AM
Colombo (News 1st) எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (19) மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. பொதுத் தேர்தல் நடைபெறுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமை மனுக்கள் மற்றும் 11 இடை மனுக்களின் மீதான பரிசீலனை நேற்று உயர்நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது. ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வௌியிட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சட்டத்தரணி சரித்த குணரத்ன உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிஹாரே, சிசிர டி ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமையை செயற்படுத்தி நாட்டின் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக சட்டங்களை உருவாக்கும் பாராளுமன்றம், இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் மூன்று மாதங்களுக்குள் கூட்டப்படாமையினால் அதிகாரிகள் அரசியலமைப்பு, பொதுத்தேர்தல் சட்டத்தை மாத்திரமின்றி நாட்டு மக்களின் அடிப்படை உரிமையையும் மீறியுள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். மக்களின் சர்வஜன வாக்குரிமைக்கு மாறாக பாராளுமன்றத்தை முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது, நாட்டின் ஜனநாயகத்தை மீறும் நடவடிக்கை எனவும் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் குறிப்பிட்டார். இந்த மனுக்கள் தொடர்பில் முதற்கட்ட ஆட்சேபனை தெரிவிப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்கா தேமுனி சில்வா இதன்போது மன்றில் தெரிவித்தார். மனுதாரர்களின் சட்டத்தரணிகள் விடயங்களை முன்வைத்ததன் பின்னர் அடிப்படை ஆட்சேபனைகளை வௌியிடுமாறு நீதியரசர்கள் குழாம் இதன்போது மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்தது. இந்த மனுக்கள் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் பரிசீலனைக்கு ​எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.