நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

by Staff Writer 18-05-2020 | 3:16 PM
Colombo (News 1st) "Amphan"அதிசக்திவாய்ந்த சூறாவளியாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வங்காள விரிகுடாவின் மத்திய கடற்பிராந்தியத்தில் Amphan சூறாவளி தற்போது நிலைகொண்டுள்ளது. இதனால் மணித்தியாலத்திற்கு 200 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை, சில கடற்பிராந்தியங்களில் 100 முதல் 150 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மறு அறிவித்தல் வரை கடற்பிராந்தியங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த 48 மணித்தியாலங்களில் தென், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையுடன் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை குருநாகல், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மண்மேடு சரிந்து வீழ்தல் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறித்த மாவட்ட மக்களை அறிவுறுத்தியுள்ளது.