போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்கும் திட்டம்

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கு விசேட செயற்றிட்டம்

by Staff Writer 17-05-2020 | 2:58 PM
Colombo (News 1st) போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்காக கொழும்பு மாவட்டத்தை கேந்திரமாக கொண்டு விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுபாட்டு சபையும் சுகாதார அமைச்சும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன. இதற்காக 11 வைத்தியசாலைகளில் சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் லக்நாத் வெலகெதர தெரிவித்துள்ளார். போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இந்த பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய வைத்தியசாலை, மாளிகாவத்தை வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்திசாலை, பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலை, நவகமுவ மாவட்ட வைத்தியசாலை, அத்துருகிரிய வைத்தியசாலை, அங்கொட தேசிய உளநல வைத்தியசாலை, ஆகிய வைத்தியசாலைகளில் விசேட சிகிச்சை பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசகர்கள் மற்றும் உளநல வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழு, போதைப்பொருளுக்கு அடிமையானர்களுக்கு சிகிச்சையளிக்கவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் லக்நாத் வெலகெதர குறிப்பிட்டுள்ளார். இது குறித்த மேலதிக தகவல்களை 0710 301301 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் மது போதைக்கு அடிமையாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.