கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பம்

by Staff Writer 17-05-2020 | 10:18 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையம், முக்கிய 3 திட்டங்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. விமான ஓடுதளத்தைப் புதுப்பித்தல், புதிய விமான தரிப்பிடங்களை அமைத்தல் மற்றும் புதிய பயணிகள் முனையங்களை அமைத்தல் ஆகிய திட்டங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. விமான ஓடுதளத்தைப் புதுப்பித்தல், புதிய தரிப்பிடங்களை அமைத்தல் ஆகியன தற்போது இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளதாக இது குறித்து நாம் வினவியபோது விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்தது. விமான நிலையத்தின் புதிய பயணிகள் முனையத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கையை மேலும் இரண்டரை வருடங்களுக்குள் நிறைவு செய்ய முடியும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
இதனைத் தவிர மேலும் இரண்டு முக்கிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 6 பில்லியன் ரூபா பெறுமதியான அந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை ஹசாமா கோபரேஷன் எனும் நிறுவனம் பொறுப்பேற்றது. அந்தப் பணிகள் இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் நிறைவடையவுள்ளன. எவ்வாறாயினும், அது இதற்கு முன்னரே நிறைவடைந்திருக்க வேண்டிய திட்டமாகும். எமது விமான நிலையத்தை ஒன்றிணைக்கும் புதிய க்ரேன் சிஸ்டம் அதுவாகும். இவ்வாறான திட்டங்கள் மூலம் பாரிய விஸ்தரிப்பு இடம்பெறுகின்றது. இதற்காக 6 பில்லியன் ரூபா செலவிடுகின்றது
என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்துள்ளார்.